பக்கங்கள்

"நாய் கடிக்கும் கவனம்' அதிகாரிகளின் எச்சரிக்கையால் தூதுவர் திருப்பினார்



முகாம் மக்களினை பார்வையிட சென்ற தென் கொரிய நாட்டின்
தூதுவரிடம் யாழ்.அரச அதிகாரிகள் “நாய் கடிக்கும் கவனம்” என எச்சரித்துள்ளனர்.


இதனால் முகாமில் உள்ள மக்களின் தற்காலிக குடிசைகளிற்கும் செல்லமுடியாமல் போனதோடு முகாம் முழுவதனையும் பார்வையிடாமலேயே தூதுவர் திரும்பிச் செல்ல நேரிட்டுள்ளது. யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த தென் கொரிய நாட்டின் தூதுவர் நேற்று மாலை 3.15 மணியளவில், வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமில் வசித்து வரும் மக்களைச் சந்திப்பதற்காக சென்றிருந்தார்.


இதன்போது தூதுவருடன் உடுவில் பிரதேச செயலர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர். இதன்போது முகாம் மக்களைச் சந்திப்பதற்காக தூதுவர் மழைவெள்ளம் மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேறு சகதிகளைத் தாண்டியும் முகாம் அமைந்துள்ள வளாகத்திற்குள் நுழைந்தார். 


சிறிது தூரம் நடந்து முகாம் மக்களின் குடிசைகளையும், வீதிகளையும், மல சலகூடம், கிணறு போன்றவற்றின் அமைவிடம் என்பவற்றினையும் அவர் பார்வையிட்டிருந்தார். முகாமிற்குள் ஊடுருவிக் சென்று கொண்டிருந்த உயர்ஸ்தானிகரை பின்தொடர்ந்து வந்த அரச அதிகாரிகள் திடீரென மறித்து தொடர்ந்து இவ்வழியால் சென்றால் அங்குள்ள நாய்கள் கடிக்கும் கவனம் எனக் கூறி தூதுவரை இடைவழியில் திருப்பி மீண்டும் ஆரம்ப இடத்திற்கு கொண்டு வந்து சேர்ந்தனர்.


இதனால் தற்காலிக முகாம் குடிசைகள் பலவற்றை தூதுவரால் நேரில் கண்காணிக்க முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறான கடிநாய்களிற்கு மத்தியிலேயே நாமும் வாழ்கின்றோம். இதற்கு நடவ டிக்கை எடுக்கவில்லை ஆனால் தூதுவரை மட்டும் பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர்.


இந்த அரச அதிகாரிகளிற்கு நாங்கள்  மனிதர்களாகத் தெரியவில்லையா? என அப்பகுதி முகாம் மக்கள் ஆதங்கத்துடன் கேள்வியயழுப்பியுள்ளனர்.